திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ள பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கின்ற 7 மாணவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையையொட்டி கேரளாவில் உள்ள குருவாயூருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். மற்றொரு கல்லூரியில் பயிலும் நண்பரையும் அழைத்துக் கொண்டு 8 மாணவர்களும் கியா கேரன்ஸ் காரில் குரூவாயூர் சென்றனர். குருவாயூரில் தரிசனம் முடித்த கையோடு மாணவர்கள் 8 பேரும் அங்கிருந்து கொடுங்காலூர் அம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக புறப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் கைப்பமங்கலம் பகுதியில் சென்ற கார் மேம்பாலம் ஒன்றின் மீதிருந்து அதிவேகத்தில் கீழே இறங்கி உள்ளது. அறிமுகமில்லா சாலையில் சீறிபாய்ந்தது கார். வலது பக்க சாலையோரம் தார்பாய் போட்ட சரக்கு லாரி ஒன்று இருட்டில் நின்றதை காரை ஓட்டிய மாணவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. கார் அந்த லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முக்கால் வாசி பகுதி உடைந்து நொறுங்கி லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது. அந்த காரில் இருந்த 7 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். பின் சீட்டில் அமர்ந்திருந்த ஒரே ஒரு மாணவர் மட்டும் சுய நினைவுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். கார் முழுவதும் லாரிக்குள் சிக்கி லாக் ஆனதால், போலீசாரால் அந்த மாணவரையும் உடனடியாக மீட்க இயலவில்லை. தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி, காரின் பாகங்களை அறுத்து எடுத்து, அந்த மாணவரை மீட்பதற்குள்ளாக அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த யுவரஞ்சித், ஜீவா, சூர்யா, மதுரையை சேர்ந்த சந்தோஷ் பிரசன்னா, சேலத்தை சேர்ந்த விஷ்வா, ஜோஷ்வா ஆகிய 8 மாணவர்கள் பலியானதாக தெரிவித்த கேரள போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் சிக்கியது 6 ஏர் பேக்குகளை கொண்ட கியா நிறுவனத்தின் கேரன்ஸ் கார் என்றும் புதிய காராக இருந்தாலும், 120 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இயக்கப்பட்டதால் லாரியின் பின் பக்கம் மோதி காரில் எந்த ஒரு ஏர் பேக்கும் வேலை செய்வதற்கு முன்பாகவே அனைத்தும் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கோர விபத்துக்கு காரின் அதிவேகம் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் , பாலத்தின் இறக்கத்தில் இடது புறமாக இருந்தாலும், வலது புறமாக இருந்தாலும் கனரக வாகனங்களை நிறுத்தி வைக்க கூடாது என்ற போக்குவரத்து விதியை மீறி நிறுத்தி வைத்திருந்த சரக்கு லாரி தான் முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டிய போலீசார், அந்த லாரியை பறிமுதல் செய்தனர். மகாராஷ்டிராவில் இருந்து கேரளாவுக்கு சரக்கு ஏற்றி வந்த லாரி ஓட்டுனர் , இந்த விபத்திற்கு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும் அந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு முன்பாக சாலைப்பணிகள் நடப்பதால் இடது புறம் சர்வீஸ் சாலையில் திரும்புவதற்கு டேக் டைவர்சன் இருந்ததாகவும், அதனை மறைத்து தான் அந்த லாரி நிறுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நினைத்து கலங்கி கதறி அழுத நிலையில், உடன் படித்த மாணவர்கள் தங்களுடன் கல்லூரியில் அந்த மாணவர்கள் சந்தோசமாக விளையாடிய காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அறிமுகமில்லா சாலையில் அதிவேகம்... லாரி ஓட்டுனரின் பொறுப்பற்ற தன்மை மட்டுமல்ல, சாலையோரம் விபத்தை ஏற்படுத்தும் எமன் போல நிறுத்தப்பட்ட லாரியை அப்புறப்படுத்தாத நெடுஞ்சாலை ரோந்து போலீசாரின் அலட்சியமான செயலும் இந்த கோர விபத்துக்கு முக்கிய காரணம் என்பதே கசப்பான உண்மை..!
KIA காரில் 120 km வேகம்.. சாலையோரம் நின்ற எமன்.. 8 மாணவர்கள் பலியான சோகம்..! பாதுகாப்பு இல்லாதது காரா? சாலையா?
திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ள பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கின்ற 7 மாணவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையையொட்டி கேரளாவில்...
By Dhallo News · September 6, 2026 at 11:11 AM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
